விவாகரத்து வழக்கில் கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலிடம் ஜீவனாம்சமாக ரூ.60 கோடி கேட்டாரா தனஸ்ரீ? உண்மை இதுதான்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். தற்போது அதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
இரு தரப்பினரின் சமூக ஊடக பதிவுகளால், அவர்கள் பிரிந்துவிட்டதாக சில காலமாக ஊகங்கள் பரவி வந்தன.
யுஸ்வேந்திர சாஹல் அல்லது தனஸ்ரீ எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை என்றாலும், விவாகரத்து ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுவிட்டதாக ஊடக அறிக்கைகள் கூறின.
இருப்பினும், தனஸ்ரீயின் வழக்கறிஞர் தற்போது அதுபோன்று வெளியாகும் செய்திகளை நிராகரித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) இதுகுறித்து வழக்கறிஞர் அதிதி மோகன் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது என்று கூறி, தவறான தகவல்களை பரப்புவதை விமர்சித்தார்.
ஜீவனாம்சம்
ஜீவனாம்சம் குறித்த வதந்திகள்
கூடுதலாக, தனஸ்ரீ ரூ.60 கோடி ஜீவனாம்சம் கோரியதாக செய்திகள் பரவிய நிலையில், அவை வெறும் வதந்தி எனக் கூறி, அவரது குடும்பத்தினர் கடுமையாக மறுத்தனர்.
மேலும், உண்மைக்கு புறம்பான அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க ஊடகங்களை அவர்கள் வலியுறுத்தினர்.
ஆதாரமற்ற செய்திகள் வெளியாவது குறித்து அவர்கள் கோபத்தை வெளிப்படுத்தினர் மற்றும் தேவையற்ற ஊகங்கள் மற்றும் தனியுரிமை மீறல்களைத் தவிர்க்க, பத்திரிகைகள் பொறுப்பாக நடந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர்.
இதற்கிடையே யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ இருவரும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த விவகாரம் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இரு தரப்பினரும் நேரடியாக எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.