இரவோடு இரவாக திடீரென முடங்கிய விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம்; அதிர்ச்சியான ரசிகர்கள்
செய்தி முன்னோட்டம்
உலகின் அதிகப்படியான பின்தொடர்பாளர்களை கொண்ட விளையாட்டு வீரர்களில் ஒருவரான விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கு, ஜனவரி 30-ம் தேதி அதிகாலை திடீரென முடங்கியது. இதனால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் பெரும் கவலையிலும் குழப்பத்திலும் ஆழ்ந்தனர். வியாழக்கிழமை இரவு விராட் கோலியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை தேடியபோது, அது 'டி-ஆக்டிவேட்' (Deactivated) செய்யப்பட்டிருந்தது. விசித்திரமாக, அதே நேரத்தில் அவரது சகோதரர் விகாஸ் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கமும் Deactivate ஆனது. பின்னர் காலை 8:30 மணியளவில் விராட் கோலியின் கணக்கு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. இருப்பினும், அவரது சகோதரரின் கணக்கு இன்னும் மீட்கப்படவில்லை.
அதிர்ச்சி
விராட் கோலியின் கணக்கு முடக்கப்பட்டதிற்கு ரசிகர்களின் ரியாக்ஷன்
கோலியின் கணக்கு மாயமான செய்தி பரவியதும், ரசிகர்கள் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்று, "அண்ணி, அண்ணனின் கணக்கு எங்கே போனது?" என வேடிக்கையாகவும் கவலையுடனும் கமெண்ட் செய்யத் தொடங்கினர். சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் "மாயமான பென்குயின்" ட்ரெண்டுடன் விராட் கோலியின் கணக்கு மறைவையும் இணைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களைப் பறக்கவிட்டனர். "2026-ம் ஆண்டு விளக்க முடியாத மர்மங்கள் நிறைந்த ஆண்டாக மாறி வருகிறது" எனப் பலரும் கிண்டலடித்தனர். இந்தத் திடீர் மறைவு குறித்து விராட் கோலி தரப்பிலிருந்தோ அல்லது இன்ஸ்டாகிராம் நிறுவனத்திடமிருந்தோ இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. இது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா அல்லது திட்டமிட்ட நடவடிக்கையா என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.