
2025 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணை வெளியானது; அக்டோபர் 5இல் இந்தியா vs பாகிஸ்தான் மோதல்
செய்தி முன்னோட்டம்
செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கவுள்ள 2025 மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியா இந்த போட்டியை நடத்த உள்ளது. அதே நேரத்தில் பிசிசிஐ மற்றும் பிசிபி ஒப்புக்கொண்ட ஹைபிரிட் மாதிரியின் ஒரு பகுதியாக பாகிஸ்தானின் போட்டிகள் அனைத்தும் இலங்கையின் கொழும்புவில் நடைபெறும்.
போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கையை எதிர்கொள்ளும்.
உலகக் கோப்பையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்றான இந்தியா vs பாகிஸ்தான் மோதல் அக்டோபர் 5 ஆம் தேதி கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
போட்டி
போட்டி விபரங்கள்
மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025இல் 28 லீக் போட்டிகள் மற்றும் மூன்று நாக் அவுட் சுற்று போட்டிகள் இடம்பெறுகின்றன.
பெங்களூர், இந்தூர், குவஹாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் கொழும்பு ஆகியவை போட்டி நடைபெறுவதற்கான மைதானங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெறாவிட்டால் அக்டோபர் 29 ஆம் தேதி முதல் அரையிறுதி குவஹாத்தியில் நடைபெறும். பாகிஸ்தான் தகுதி பெற்றால் இது கொழும்புவிற்கு மாற்றப்படும்.
இரண்டாவது அரையிறுதி அக்டோபர் 30 ஆம் தேதி பெங்களூரில் நடைபெறும். இறுதிப் போட்டி நவம்பர் 2 ஆம் தேதி பெங்களூர் அல்லது கொழும்புவில் நடைபெறும்.
போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகியவை பங்கேற்கின்றன.