டீப் ஃபேக் புகைப்படங்கள் மற்றும் போலி எக்ஸ் கணக்குகளால் சாரா டெண்டுல்கர் அதிருப்தி
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர், எக்ஸ் தளத்தில் தன்னுடைய பெயரில் இயங்கும் கணக்குகள் டீப் ஃபேக் புகைப்படங்களை வெளியிடுவது குறித்து கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சாரா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்ட ஒரு அறிக்கையில், "நம் அனைவருக்கும் நமது மகிழ்ச்சிகள், துக்கங்கள் மற்றும் அன்றாட செயல்பாடுகளைப் பகிர்ந்து கொள்ள சமூக ஊடகங்கள் ஒரு அற்புதமான இடம். இருப்பினும், இணையத்தின் உண்மை மற்றும் நம்பகத்தன்மையிலிருந்து தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதைப் பார்ப்பது அதிருப்தி அளிக்கிறது. எக்ஸ் தளத்தில் எனது பெயரில் சில போலி கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனக்கு அதில் கணக்கு எதுவும் இல்லை. அத்தகைய கணக்குகளைப் பார்த்து அவற்றை எக்ஸ் இடைநீக்கம் செய்யும் என்று நம்புகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபமெடுக்கும் டீப் ஃபேக் சர்ச்சை
பிரபலங்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களின் டீப்ஃபேக் வீடியோக்கள் இணையத்தில் வெளிவருவது மற்றும் மார்பிங் வீடியோக்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவது சமீப காலமாக அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. சில வாரங்களுக்கு முன்பு நடிகை ரஷ்மிகா மந்தனாவின் வைரலான டீப்ஃபேக் வீடியோ, செயற்கை நுண்ணறிவு டீப்ஃபேக்குகள் மற்றும் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடற்ற அணுகல் ஆகியவற்றில் கவனத்தை ஈர்த்தது. இது மிகப்பெரிய சிக்கலை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், செயற்கை நுண்ணறிவுக்கு உலகளாவிய கட்டுப்பாடுகள் வந்தால் மட்டுமே இவற்றை கட்டுப்படுத்த முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.