
டி20 கிரிக்கெட்டில் எம்எஸ் தோனியின் சிக்சர் சாதனையை முறியடித்தார் சஞ்சு சாம்சன்
செய்தி முன்னோட்டம்
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த இந்தியர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சன் எம்எஸ் தோனியை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் தற்போது டி20 கிரிக்கெட்டில் 342 சிக்சர்களை அடித்துள்ளார்.
இதன் மூலம் எம்எஸ் தோனியின் 341 சிக்சர்களை முந்தியுள்ளார். அவர் இந்த மைல்கல்லை 285 டி20 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார்.
அதே நேரத்தில் தோனி தனது 341 சிக்சரை எட்ட 345 இன்னிங்ஸ்களை எடுத்துள்ளார்.
இதற்கிடையே டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர்களில் ரோஹித் ஷர்மா 525 சிக்சர்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 420 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். சூர்யகுமார் யாதவ் 347 சிக்சர்களுடன் சஞ்சு சாம்சனை விட சற்று முன்னால் உள்ளார்.
சஞ்சு சாம்சன்
ஐபிஎல்லில் கேப்டன்சி செய்யாதது ஏன்?
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரர்களில் சாதனை படைத்த சஞ்சு சாம்சன் ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார்.
இந்நிலையில், ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளில் அவர் பங்கேற்றாலும் கேப்டன்சி செய்யவில்லை.
அணியின் கேப்டன் பொறுப்பை ரியான் பராக் கவனித்து வருகிறார். இது பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், அதற்கான காரணமும் தெரிய வந்துள்ளது.
அதாவது ஐபிஎல் 2025 தொடருக்கு முன்பே அவருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டுவிட்டது.
அதிலிருந்து முழுமையாக குணமடையாத நிலையில், சரியாக விக்கெட் கீப்பிங் செய்ய முடியாது என்பதால், அணியின் நலன் கருதி குணமாகும் வரை பேட்டிங் செய்துவிட்டு, இம்பாக்ட் பிளேயர் மூலம் மாற்றப்படுகிறார்.