யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு விளையாடும் 11'இல் வாய்ப்பு : உறுதி செய்தார் ரோஹித் ஷர்மா
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் புதன்கிழமை (ஜூலை 12) தொடங்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு தயாராகி வரும் நிலையில், விளையாடும் 11'இல் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெறுவதை கேப்டன் ரோஹித் ஷர்மா உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் மற்றும் இந்திய உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் சிறப்பாக விளையாடியதன் மூலம், 21 வயதே ஆன யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு டெஸ்ட் மற்றும் டி20 அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் சேர்ந்து களமிறங்குவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஷுப்மன் கில்லுக்கும் இந்திய அணியில் இடம்
சமீப காலத்தில் இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக மாறியுள்ள ஷுப்மன் கில் மூன்றாவது இடத்தில் களமிறங்குவார் என்று ரோஹித் ஷர்மா மேலும் கூறியுள்ளார். ஷுப்மன் கில்லை மூன்றாவது இடத்தில் களமிறக்குவதன் மூலம் வலது, இடது காம்பினேஷன் சரியாக இருக்கும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரோஹித் ஷர்மா விளக்கம் அளித்துள்ளார். இதற்கிடையே, இந்திய அணி இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் என ரோஹித் ஷர்மா கூறினாலும், அவர்களது பெயர்களை வெளியிடவில்லை. எனினும், ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன் ஆகியோர் லெவன் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.