உலகக்கோப்பை கால்பந்து 2026: மைதானங்களை ஆக்கிரமிக்கும் 'பிங்க்' நிற காலணிகள்; என்ன காரணம்?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர், தற்பொழுது ஒரு புதிய ஃபேஷன் ட்ரெண்டால் உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தத் தொடரில் விளையாடும் முன்னணி நட்சத்திர வீரர்கள் பலரும் பிங்க் மற்றும் மெஜந்தா நிறத்திலான கால்பந்து காலணிகளை அணிந்து விளையாடி வருவதால், இது விளையாட்டு உலக வட்டாரத்தில் ஃபுசியா உலகக்கோப்பை (Fuschia World Cup) என்று வர்ணிக்கப்படுகிறது.
வைரல்
மைதானத்தில் பிங்க் மயம்
மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டத்திலேயே, இரு அணிகளையும் சேர்ந்த 22 வீரர்களில் 19 பேர் பிங்க் நிற காலணிகளை அணிந்து எஸ்தாடியோ அஸ்டெகா மைதானத்தில் களம் இறங்கினர். தற்பொழுது இந்த ட்ரெண்ட் கைலியன் எம்பாப்பே, எர்லிங் ஹாலாண்ட் போன்ற உலகப் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரங்கள் முதல் கேப் வெர்டி மற்றும் குராசோ போன்ற சிறிய நாடுகளின் வீரர்கள் வரை காட்டுத்தீ போலப் பரவியுள்ளது.
காரணம்
விளையாட்டு நிறுவனங்கள் பிங்க் நிறத்தை தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
நைக், அடிடாஸ், பூமா போன்ற உலகின் முன்னணி விளையாட்டுத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் இந்த உலகக்கோப்பைக்காக பிரத்யேகமாக பிங்க் நிற காலணிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன் பின்னணியில் உள்ள முக்கியக் காரணங்களை நிறுவனங்கள் விளக்கியுள்ளன. பச்சைப்புல் மைதானத்தில் விளையாடும் போது பிரகாசமான பிங்க் நிறம், மைதானத்தில் இருக்கும் மற்ற வீரர்களின் கண்களுக்கு எளிதாகத் தெரியும். பிரகாசமான நிறங்களை அணிவது தங்களின் அசாத்தியத் திறமையையும், அதீத தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாக வீரர்கள் கருதுகின்றனர். கடந்த 2024-ஆம் ஆண்டிலேயே 'WGSN' என்ற முன்கணிப்பு அமைப்பு, 2026-ஆம் ஆண்டில் எலக்ட்ரிக் ஃபுசியா என்ற பிங்க் மற்றும் ஊதா கலந்த நிறம் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் எனக் கணித்திருந்தது. அது தற்பொழுது விளையாட்டு உலகில் உண்மையாகியுள்ளது.