
ஐபிஎல் 2025 ஆர்சிபிvsபிபிகேஎஸ்: இறுதிப்போட்டி மழையால் ரத்தானால் கோப்பை யாருக்கு?
செய்தி முன்னோட்டம்
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) நடைபெற்ற ஐபிஎல் 2025 தொடரின் இரண்டாவது குவாலிஃபயர் போட்டி மழையால் தாமதமாக தொடங்கியது.
இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், ஜூன் 3 ஆம் தேதி இறுதிப்போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகளுக்கு இடையே நடக்க உள்ளது.
இரண்டாவது குவாலிஃபயர் நடந்த அதே அகமதாபாத் மைதானத்திலேயே இறுதிப்போட்டியும் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தென்மேற்குப் பருவமழை காரணமாக, போட்டிக்கு மழையால் இடையூறு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மழை பெய்து போட்டி ரத்தானால் கோப்பை யாருக்கு என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ரிசர்வ் நாள்
ஜூன் 4 ரிசர்வ் நாள்
ஜூன் 3 அன்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மழை பெய்து இடையூறு ஏற்பட்டால், அனுமதிக்கப்பட்ட கூடுதல் நேரம் வரை, ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடக்கும்.
அதே நேரம், அனுமதிக்கப்பட்ட கூடுதல் நேரம் வரை போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்படும்போது, ரிசர்வ் நாளாக ஒதுக்கப்பட்டுள்ள ஜூன் 4 அன்று போட்டி மீண்டும் நடத்தப்படும்.
இந்நிலையில், ஜூன் 4 அன்றும் மழை காரணமாக போட்டியை திட்டமிட்டபடி, அனுமதிக்கப்பட்ட கூடுதல் நேரத்திற்குள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், இரு அணிகளில் எந்த அணி லீக் சுற்று முடிவில் புள்ளிகள் பட்டியலில் மேலே உள்ளதோ, அந்த அணி வென்றதாக அறிவிக்கப்பட்டு கோப்பை வழங்கப்படும்.
அந்த வகையில், இது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சாதகமாக முடியும்.