இறுதிப்போட்டியில் தோற்றாலும் சாதனை நாயகனாக வலம் வரும் பிரக்ஞானந்தா
செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தா போராடி தோல்வியடைந்தார். முன்னதாக, இரண்டு ஆட்டங்கள் கொண்ட கிளாசிக்கல் சுற்று டிராவில் முடிவடைந்த நிலையில், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24) டை-பிரேக்கரில் கார்ல்சனால் பிரக்ஞானந்தா தோற்கடிக்கப்பட்டார். இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவி, பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தாலும், செஸ் உலகின் பல முக்கியமான சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ளார். அவை பின்வருமாறு:- பிப்ரவரி 2022இல், பிரக்ஞானந்தா அப்போதைய உலக சாம்பியனான கார்ல்சனை தோற்கடித்த இளைய வீரர் ஆனார். இருவரும் 20 முறை நேருக்கு நேர் மோதியதில் பிரக்ஞானந்தா 9 வெற்றிகளையும், 5 தோல்விகளையும் பெற்றுள்ளார். 6 போட்டிகள் டிராவில் முடிந்தன.
கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்ற மூன்றாவது இளையவர்
ஆர் பிரக்ஞானந்தா ஆகஸ்ட் 10, 2005 அன்று சென்னையில் பிறந்தார். 10 வயதில் சர்வதேச மாஸ்டர் ஆனதோடு, அந்த நேரத்தில் இந்த சாதனையை அடைந்த இளம் வயது வீரர் ஆனார். மேலும், பிரக்ஞானந்தா 12 வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆனார். அந்த நேரத்தில் இந்த அடையாளத்தை அடைந்த இரண்டாவது இளம் வீரர் ஆனார். எனினும், தற்போது ஒட்டுமொத்தமாக கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற ஐந்தாவது இளம் வீரராக உள்ளார். இதற்கிடையே செஸ் உலகக்கோப்பை அரையிறுதியில் வெற்றி பெற்றதன் மூலம், 2024இல் நடக்க உள்ள கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் பாபி பிஷர் மற்றும் கார்ல்சனுக்குப் பிறகு இந்த போட்டிக்கு தகுதி பெற்ற மூன்றாவது இளம் வயது வீரர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளார்.