ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே இலக்கு; பிரகாஷ் படுகோனின் வழிகாட்டுதலில் பயிற்சியை தொடங்கும் பிவி சிந்து
இந்தியாவின் புகழ்பெற்ற முன்னாள் பேட்மிண்டன் வீரர்களில் ஒருவரான பிரகாஷ் படுகோனை தனது புதிய வழிகாட்டியாக இணைத்துள்ளதாக பிவி சிந்து அறிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பெங்களூருவில் உள்ள பிரகாஷ் படுகோனின் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளார். சிந்து 2023 ஆம் ஆண்டின் முற்பகுதியில் கணுக்கால் காயத்தில் இருந்து அவர் திரும்பினாலும் ஆண்டு முழுவதும் ஒரு வெற்றியைக் கூட பெற முடியாமல் போராடி வருகிறார். ஆர்க்டிக் ஓபன், டென்மார்க் ஓபன், கனடா ஓபன் மற்றும் மலேஷியா மாஸ்டர்ஸ் ஆகிய போட்டிகளில் மட்டுமே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவரது செயல்திறன் இருந்தது. இந்நிலையில், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதை இலக்காகக் கொண்டு பிரகாஷ் படுகோனுடன் இணைந்துள்ளார்.