நியமனம் செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் நீக்கம்; பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பரபரப்பு
தலைமை தேர்வாளருக்கான உறுப்பினர் ஆலோசகராக சல்மான் பட்டை நியமித்த ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) பொது மற்றும் ஊடக அழுத்தத்தின் காரணமாக நீக்கியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் மோசமாக செயல்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளருக்கான உறுப்பினர் ஆலோசகராக சல்மான் பட் நியமிக்கப்பட்டார். முன்னதாக, சல்மான் பட் கடந்த 2010இல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து 10 ஆண்டுகளுக்கு ஐசிசி தடை விதித்தது. மேலும், பிரிட்டனில் அவர் சிறைத் தண்டனையையும் பெற்றுள்ளார்.
எதிர்ப்பால் பின்வாங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
ஒரு கறைபடிந்த நபர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் பொறுப்புக்கு கொண்டுவரப்படுவதற்கு அந்நாட்டில் கண்டனங்கள் எழுந்தன. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நியமனம் செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். தலைமை தேர்வாளர் வஹாப் ரியாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டதோடு, சல்மான் பட் தனது தவறுக்கு ஏற்கனவே தனிப்பட்ட முறையில் அவர் தண்டனையை அனுபவித்துவிட்டதால் மக்கள் மாற வேண்டும் என்று நினைப்பதாக தெரிவித்துள்ளார். சல்மான் பட் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 33 டெஸ்ட், 78 ஒருநாள் மற்றும் 24 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.