
INDvsENG முதல் டெஸ்ட்: ஓலி போப் சதம் மூலம் இரண்டாம் நாளில் மீண்டெழுந்தது இங்கிலாந்து
செய்தி முன்னோட்டம்
இந்தியா vs இங்கிலாந்து இடையே ஹெடிங்கிலியில் நடந்து வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2வது நாளில் இங்கிலாந்து வலுவான பதிலடி கொடுத்து மீண்டது. முன்னதாக, டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி முதல் நாளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில்லின் சதம் மூலம் முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் என வலுவாக முடித்தது. இரண்டாம் நாளில் ரிஷப் பண்ட் மற்றொரு சதம் அடித்தாலும், ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் அவுட்டான பிறகு, மளமளவென விக்கெட்டுகள் வீழ்த்து 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஓலி போப்
சதமடித்தார் ஓலி போப்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் சிறப்பான பந்துவீசிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் டங் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து ஆரம்பத்திலேயே ஜாக் கிராலியின் விக்கெட்டை இழந்தாலும், பென் டக்கெட் மற்றும் ஓலி போப் நிலைத்து நின்று அணியை மீட்டனர். பென் டக்கெட் 62 ரன்களில் அவுட்டான நிலையில், அடுத்து வந்த ஜோ ரூட்டும் 28 ரன்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் ஓலி போப் (100 நாட் அவுட்) சதமடித்த நிலையில், இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து இழந்த 3 விக்கெட்டுகளையும் ஜஸ்ப்ரீத் பும்ராவே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.