
34 ஆண்டுகளில் முதல்முறை; டூரண்ட் கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக கைப்பற்றியது நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி
செய்தி முன்னோட்டம்
நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி கால்பந்து அணி சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) டூரண்ட் கோப்பை இறுதிப் போட்டியில் புதிய அணியான டயமண்ட் ஹார்பரை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தொடர்ச்சியாக கோப்பையை வென்ற அணி என்ற சாதனையைப் படைத்தது. கடந்த 34 ஆண்டுகளில் இந்த சாதனையை எட்டிய முதல் அணி இதுவாகும். இதற்கு முன் ஈஸ்ட் பெங்கால் அணி மட்டுமே 1989 மற்றும் 1991 ஆண்டுகளுக்கு இடையில் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றது. முன்னதாக, ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றது. அஷீர் அக்தர் 30வது நிமிடத்திலும், பார்த்திப் கோகோய் 46வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
ஆதிக்கம்
இரண்டாவது பாதியிலும் தொடர்ந்த ஆதிக்கம்
இரண்டாம் பாதியிலும் நார்த்ஈஸ்ட் யுனைடெடின் ஆதிக்கம் தொடர்ந்தது. தோய் சிங் 50வது நிமிடத்தில் கோல் அடிக்க, எதிரணிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக லூகா மஜ்சென் 68வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இருப்பினும், ஸ்பெயின் வீரர்கள் ஜைரோ சாம்பேரியோ (81வது நிமிடம்) மற்றும் ஆண்டி ரோட்ரிக்ஸ் (85வது நிமிடம்) அடுத்தடுத்து கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தனர். கடைசி கோல், கூடுதல் நேரத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் அலாதீன் அஜரையால் அடிக்கப்பட்டது. இவர், இத்தொடரில் 8 கோல்களை அடித்து அதிக கோல் அடித்தவர் (Golden Boot) மற்றும் சிறந்த வீரர் (Golden Ball) ஆகிய இரண்டு விருதுகளையும் வென்றார்.