தேசிய கொடி இல்லாமல் வந்த பாக். வீரரை இந்திய கொடியின் கீழ் நிற்க வைத்த நீரஜ் சோப்ரா; வைரலாகும் காணொளி
ஹங்கேரியில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) நடைபெற்ற தடகள உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்றுக் கொடுத்தார். உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா இதுவரை தலா ஒரு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றுள்ளது. வெண்கலத்தை அஞ்சு பாபி ஜார்ஜ் வென்ற நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி இரண்டையும் நீரஜ் இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். இதற்கிடையே, இந்த போட்டியில், பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி வென்றார். மேலும், செக் குடியரசின் ஜக்குப் வாட்லெஜ் வெண்கலம் வென்றார்.
பாகிஸ்தான் வீரரை இந்திய கொடியின் கீழ் நிற்கவைத்த நீரஜ் சோப்ரா
முதல்முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒரே நேரத்தில் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் பதக்கம் வென்ற நிலையில், வெற்றி பெற்றவுடன் இருவரும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். இதன் பின்னர் வீரர்கள் தங்களது தேசிய கொடியுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது நீரஜ் சோப்ரா மற்றும் செக் குடியரசின் ஜக்குப் வாட்லெஜ் ஆகியோர் மட்டுமே இருந்தனர். அர்ஷத் நதீம் தன்னிடம் தேசியக் கொடி இல்லாததால், புகைப்படம் எடுக்கும் இடத்திலிருந்து விலகி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதை கவனித்த நீரஜ் சோப்ரா, உடனடியாக அவரை அழைத்து தன்னுடன் இந்திய கொடியின் கீழ் நிற்க வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை உருக வைத்துள்ளது.