4 ஐபிஎல் கோப்பைகள், 38 வயதில் ஓய்வு! அனைத்து வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் விலகுவதாக கரண் சர்மா அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளரும், 4 முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய சாதனையாளருமான கரண் சர்மா, சர்வதேச மற்றும் உள்நாட்டுப் போட்டிகள் உட்பட அனைத்து வடிவக் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 38 வயதான இவர், தற்போது நடைபெற்று வரும் யுபி டி20 லீக் தொடரில் கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஆகஸ்ட் 25 அன்று லக்னோவில் நடைபெறும் போட்டியே இவரது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி ஆட்டமாக அமையும் எனக் கூறியுள்ளார்.
ஐபிஎல் கோப்பை
ஹாட்ரிக் ஐபிஎல் கோப்பைகளை வென்ற அசாத்திய சாதனை
கரண் சர்மா சர்வதேச போட்டிகளில் குறைவாக விளையாடியிருந்தாலும், ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய சாதனையாளராக விளங்கியுள்ளார்.
2016ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2017ல் மும்பை இந்தியன்ஸ் மற்றும் 2018ல் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய மூன்று வெவ்வேறு அணிகளுக்காகத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரிசையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற தனித்துவமான வரலாற்று சாதனையை படைத்தார்.
தொடர்ந்து 2021 ஆம் ஆண்டிலும் சிஎஸ்கே அணியுடன் தனது 4வது ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றினார்.
சர்வதேச போட்டிகள்
குறுகிய சர்வதேசப் பயணம் மற்றும் அடிலெய்ட் டெஸ்ட் போட்டிகள்
2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்திய டி20 அணியில் அறிமுகமான கரண் சர்மா, ஜோ ரூட்டின் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
அதன்பின் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அடிலெய்ட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
ரோஹித் ஷர்மா 264 ரன்கள் குவித்து சாதனை படைத்த வரலாற்று சிறப்புமிக்க ஒருநாள் போட்டியிலும் கரண் சர்மா விளையாடியுள்ளார்.
காயங்கள் காரணமாக இந்திய அணியில் இவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
முதல் தர கிரிக்கெட்
முதல் தரக் கிரிக்கெட்டில் முத்திரை பதித்த கரண் சர்மா
உள்நாட்டு முதல் தரக் கிரிக்கெட்டில் 97 போட்டிகளில் விளையாடியுள்ள கரண் சர்மா, 270 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன் 2,866 ரன்களையும் குவித்துள்ளார்.
இதில் 14 முறை 5 விக்கெட்டுகளையும், 2 சதங்களையும் பதிவு செய்துள்ளார்.
ஓய்வுக்குப் பிறகு கிரிக்கெட் பயிற்சியாளராகவும், இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்படப் போவதாகக் கரண் சர்மா தெரிவித்துள்ளார்.
நீண்டகாலக் கிரிக்கெட் பயணத்திற்கு ஆதரவளித்த குடும்பத்தினருக்கும், பிசிசிஐ மற்றும் ரயில்வே வாரியத்திற்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.