'எல்லை மீறி போறீங்க, ஏத்துக்க முடியாது' : ஜெய் ஸ்ரீராம் கோஷத்துக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
இந்தியா vs பாகிஸ்தான் இடையே சனிக்கிழமை (அக்.14) நடந்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டியின் போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்களை நோக்கி ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பும் வீடியோக்கள் வெளியாகி வைரலானது. இந்த வீடியோக்கள் வெளிவந்ததை அடுத்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரசிகர்களின் நடத்தையை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என விமர்சித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "இந்தியா அதன் விளையாட்டு மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றது. இருப்பினும், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்களிடம் ரசிகர்கள் நடந்து கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. நாடுகளுக்கு இடையே உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்கும் விளையாட்டை வெறுப்பை பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது." எனத் தெரிவித்துள்ளார்.