கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தீ விபத்து; உலகக்கோப்பை போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா?
அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடருக்காக, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், ஸ்டேடியத்தின் டிரஸ்ஸிங் ரூம் ஒன்றில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கைகளின்படி புதன்கிழமை (ஆகஸ்ட் 9) இரவு 11:50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டிரஸ்ஸிங் ரூமுக்கு வெளியே சீரமைப்பு பணி நடந்து கொண்டிருந்தபோது, டிரஸ்ஸிங் அறையில் இருந்து புகை வருவதைக் கண்ட மைதான ஊழியர்கள், உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தன.
ஈடன் கார்டனில் நடக்கும் போட்டிகளின் பட்டியல்
உலகக் கோப்பையின் போது ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 16ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதி உட்பட ஐந்து போட்டிகள் நடைபெற உள்ளன. லீக் சுற்றில் அக்டோபர் 28 ஆம் தேதி வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து மோதும் போட்டி அங்கு நடக்கும் முதல் போட்டியாகும். அதன் பின்னர் அக்டோபர் 30இல் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம், நவம்பர் 5இல் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா, நவம்பர் 11இல் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து மோதும் போட்டிகளை நடத்த உள்ளன. மேலும் நவம்பர் 16ஆம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியும் இதே மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்கிடையே, தற்போது தீ விபத்தால் மைதானம் பாதிக்கப்பட்டாலும், அது உலகக்கோப்பை போட்டியில் பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கூறப்படுகிறது.