இந்திய அணியின் ஊடக உரிமை ஏலம்; ரூ.8,200 கோடி வருவாயை எதிர்பார்க்கும் பிசிசிஐ
பிசிசிஐ மார்ச் 2028 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் இந்தியாவின் 88 உள்நாட்டு போட்டிகளுக்கான தனி டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகளை விற்பதன் மூலம் ரூ.8,200 கோடியை ஈட்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளில், இந்திய கிரிக்கெட் அணி உள்நாட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 21 போட்டிகள் (ஐந்து டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 10 டி20) இங்கிலாந்துக்கு எதிரான 18 போட்டிகள் (10 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20) உட்பட 25 டெஸ்ட், 27 ஒருநாள் மற்றும் 36 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. முன்னதாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் (2018-23) பிசிசிஐ ஊடக உரிமைகளை விற்றதன் மூலம் ரூ.6,138 கோடி வருவாயை ஈட்டி இருந்தது.
டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகளை தனியாக ஏலம் விடும் பிசிசிஐ
கடந்த முறை அனைத்து ஊடக உரிமைகளையும் ஒன்றாக ஸ்டார் நிறுவனத்திற்கு வழங்கியது போல் இல்லாமல், இந்த முறை டிஜிட்டல் மற்றும் டிவி ஏலத்தை தனியாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஐபிஎல் ஊடக உரிமை ஏலத்தின் போது டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகளை தனித்தனியாக விற்றதன் மூலம் 48,390 கோடி ரூபாய் சம்பாதித்த பிறகு, பிசிசிஐ தற்போது இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கும் அதே பாணியில் ஏலம் விட உள்ளது. ஐபிஎல்லில் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஏலத்தை வென்றது மற்றும் ஸ்டார் நிறுவனம் டிவி உரிமையை வென்றது. ஐபிஎல் ஏலத்தை போலவே இந்த ஏலமும் மின்-ஏல முறையில் நடத்தப்பட உள்ளது. ஏலத்தில் டிஸ்னி-ஸ்டார், ரிலையன்ஸ்-வயாகாம் மற்றும் ஜீ நிறுவனங்கள் முக்கிய போட்டியாளர்களாக இருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.