BANvsNED ஒருநாள் உலகக்கோப்பை : வங்கதேசத்திற்கு 230 ரன்கள் இலக்கு நிர்ணயம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் சனிக்கிழமை (அக்டோபர் 28) நடந்த போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக நெதர்லாந்து முதல் இன்னிங்சில் 229 ரன்கள் எடுத்தது. முன்னதாக, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விக்ரம்ஜித் சிங் 3 ரன்களிலும், மேக்ஸ் ஓ'டவுட் 0 ரன்களிலும் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். அடுத்து வந்த வெஸ்லி பாரேசி ஒரு பக்கம் நிலைத்து நின்று ரன் சேர்த்தாலும், மறுமுனையில் காலின் ஆக்கர்மேன் 15 ரன்களில் வெளியாகி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் நெதர்லாந்து அணி ஒரு கட்டத்தில் 63 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அணியை மீட்ட வெஸ்லி பாரேசி-ஸ்காட் எட்வர்ட்ஸ்
வங்கதேச கிரிக்கெட் அணியின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நெதர்லாந்து தடுமாறிய நிலையில், வெஸ்லி பாரேசி மற்றும் ஸ்காட் எட்வர்ட்ஸ் நிலைத்து நின்று அணியை மீட்டனர். இதில் வெஸ்லி பாரேசி 41 ரன்களையும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 68 ரன்களையும் எடுத்தனர். பின்னர் வந்தவர்களில் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார். இதன் மூலன் நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணியில் சிறப்பாக பந்துவீசிய ஷோரிபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, மஹேதி ஹசன் மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.