நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வங்கதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமனம்
இந்த மாத இறுதியில் தொடங்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான எதிரான இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ வங்கதேச அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையின் போது அணியின் வழக்கமான கேப்டன் ஷாகிப் அல் ஹசன் காயமடைந்ததால் நஜ்முலுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், நியூசிலாந்து தொடரின்போது அணியின் துணை கேப்டன் லிட்டன் தாஸ், சமீபத்தில் பிறந்த தனது பெண் குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதற்காக விடுப்பில் செல்கிறார். இதனால், டெஸ்ட் அணியின் கேப்டனாக நியூசிலாந்து தொடருக்கு நஜ்முல் ஹொசைன் சாண்டோ செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச அணியின் நியூசிலாந்து தொடர்
நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள வங்கதேச கிரிக்கெட் அணி முதல் டெஸ்டை நவம்பர் 28 முதல் டிசம்பர் 2 வரை சில்ஹெட்டில் விளையாட உள்ளது. டாக்காவின் ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் டிசம்பர் 6-10 வரை இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறும். இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் நஜ்முல் ஹொசைன் கேப்டனாக செயல்பட உள்ளார். முன்னதாக, நஜ்முல் உலகக் கோப்பைக்கு முன்னர் ஒருநாள் சர்வதேச அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஷாகிப் மற்றும் லிட்டன் இல்லாத நிலையில், கடந்த செப்டம்பரில் நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் வங்கதேச அணியை வழிநடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.