16 ஆண்டுகால சூப்பர் ஓவர் வரலாற்றில் முதல்முறை; மோசமான சாதனை படைத்தது பஹ்ரைன்
செய்தி முன்னோட்டம்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூப்பர் ஓவரில் பூஜ்ஜிய ரன்கள் எடுத்த முதல் அணி என்ற துரதிர்ஷ்டவசமான சாதனையை பஹ்ரைன் படைத்துள்ளது.
மலேசிய டி20ஐ முத்தரப்பு தொடரில் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) பாயுமாஸ் கிரிக்கெட் ஓவலில் நடந்த ஹாங்காங்கிற்கு எதிரான மோதலின் போது இந்த மோசமான சாதனை படைக்கப்பட்டது.
பஹ்ரைன் ஹாங்காங்கின் 129/7 என்ற மொத்த இலக்கை துரத்தி விளையாடும்போது கடைசி இரண்டு பந்தில் 7 தேவைப்பட்டது.
அப்போது பஹ்ரைனின் கேப்டன் அஹ்மர் பின் நாசிர் ஐந்தாவது பந்தில் சிக்சர் அடித்து, கடைசி பந்தில் அவுட்டானார். இதனால் போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்றது.
சூப்பர் ஓவர்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பஹ்ரைன்
சூப்பர் ஓவரில் ஐசிசியின் டி20ஐ விதிப்படி முதலில் பேட்டிங் செய்த பஹ்ரைன், ஹாங்காங்கின் எஹ்சான் கானை எதிர்த்துப் போராடியது.
இரண்டாவது பந்தில் பின் நாசிர் ஆட்டமிழந்தார், அதைத் தொடர்ந்து மூன்றாவது பந்தில் சோஹைல் அகமது அவுட்டானதால், பஹ்ரைன் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தது.
டி20ஐ விதிகளின்படி, இரண்டு விக்கெட்டுகளை இழந்தால் பேட்டிங் அணியின் சூப்பர் ஓவர் இன்னிங்ஸ் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஹாங்காங் அணி தனது சூப்பர் ஓவரில் எளிதாக வெற்றி பெற்றது.
சூப்பர் ஓவர் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, 16 ஆண்டுகளில், ஒரு அணி சூப்பர் ஓவரில் ரன் அடிக்கத் தவறியது இதுவே முதல் முறையாகும்.
இது பஹ்ரைனின் துரதிர்ஷ்டவசமான சாதனையை சர்வதேச கிரிக்கெட்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக மாற்றியுள்ளது.