AUSvsSA Semifinal Weather Report : மழை பெய்ய அதிக வாய்ப்பு; திட்டமிட்டபடி போட்டி நடக்குமா?
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இரண்டாவது அரையிறுதியில் வியாழக்கிழமை (நவம்பர் 16) தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. லீக் கட்டத்தில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி, தங்களின் ஒன்பது ஆட்டங்களில் தலா ஏழில் வெற்றி பெற்றன. இருப்பினும், லீக் கட்டத்தில் தென்னாப்பிரிக்கா 134 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால், இதிலும் வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் இந்தியாவை சந்திக்கும். கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வியாழக்கிழமை இந்திய நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.
வானிலை அறிக்கை
கொல்கத்தாவில் வியாழக்கிழமை சூரிய ஒளியுடன் கூடிய மேகமூட்டமான நாளாக இருக்கும் என வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. அக்யூவெதரின் கூற்றுப்படி, விளையாட்டின் போது வெப்பநிலை 22-28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், மழை பெய்ய 70% வாய்ப்பு உள்ளது. ஈரப்பதம் 76% ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டிக்கு ஒரு ரிசர்வ் நாள் உள்ளதால், மழை பெய்து ஆட்டம் ரத்தானாலும், மீண்டும் நவம்பர் 17ஆம் தேதி போட்டி நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ரிசர்வ் நாளிலும் போட்டியை நடத்த முடியாமால் போனால், புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.