ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம்; புதிய வரலாறு படைத்த இந்திய பேட்மிண்டன் ஜோடி
சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சனிக்கிழமையன்று (அக்டோபர் 7) தங்கம் வென்றனர். ஆடவர் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் தென்கொரியாவைச் சேர்ந்த சோய் சோல்கியூ மற்றும் கிம் வோன்ஹோவை எதிர்கொண்ட இந்திய ஜோடி 21-18, 21-16 என்ற நேர் செட் கணக்கில் எதிரணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவு பேட்மிண்டனில் தங்கம் வென்ற முதல் ஜோடி என்ற சாதனையையும் சாத்விக் மற்றும் சிராக் ஜோடி படைத்துள்ளனர். மேலும், இந்த தங்கப் பதக்கம் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.