ஆசிய விளையாட்டுப் போட்டி : மகளிர் கிரிக்கெட்டில் தங்கம் வென்றது இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இல் திங்கட்கிழமை (செப்டம்பர் 25) இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்றது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 46 ரன்களும், ஜெமிமா ரோட்ரிகஸ் 42 ரன்களும் எடுத்தனர். இலங்கை கிரிக்கெட் அணியில் உதேஷிகா பிரபோதனி, இநோகா ரணவீரா, மற்றும் சுகந்திகா குமாரி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
19 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
117 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இலங்கை அணியில் ஹாசினி பெரேரா அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய டைட்டஸ் சாது 3 விக்கெட்டுகளையும், ராஜேஸ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணி தங்கத்தையும், இலங்கை அணி வெள்ளியையும் கைப்பற்றியுள்ளது. இந்தியாவுக்கு இது இரண்டாவது தங்கமாகும். முன்னதாக, வெண்கலத்திற்காக நடந்த போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.