Asian Games அக்டோபர் 5: ஒரே நாளில் ஹாட்ரிக் அடித்த இந்தியா; வில்வித்தை போட்டியில் மூன்றாவது தங்கம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வியாழக்கிழமை (அக்டோபர் 5) நடைபெற்ற ஆடவர் காம்பவுண்ட் வில்வித்தை போட்டியில் இந்தியா தங்கம் வென்றது. போட்டியின் 12வது நாளான வியாழக்கிழமை ஆடவர் காம்பவுண்ட் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஓஜஸ் தியோடலே, அபிஷேக் வர்மா மற்றும் பிரதமேஷ் ஜாவ்கர் அடங்கிய அணி இறுதிப்போட்டியில் தென்கொரியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி தென்கொரியாவை 235-230 என்ற புள்ளிக்கணக்கில் போராடி வீழ்த்தி, இந்தியாவுக்காக 21வது தங்கத்தை வென்றது. மேலும் வில்வித்தை பிரிவில் இந்தியாவுக்கு இது மூன்றாவது தங்கமாகும். முன்னதாக மகளிர் காம்பவுண்ட் பிரிவிலும், கலப்பு காம்பவுண்ட் பிரிவிலும் இந்தியா தங்கம் வென்றது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் செயல்திறன்
ஆடவர் காம்பவுண்ட் வில்வித்தை போட்டியில் தங்கம் வென்றதன் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மொத்தம் 84 ஆக உயர்ந்துள்ளது. இதில் 21 தங்கம், 31 வெள்ளி மற்றும் 32 வெண்கல பதக்கங்கள் அடங்கும். மேலும் தங்கத்தைப் பொறுத்தவரை துப்பாக்கிச் சுடுதலில் அதிகபட்சமாக 7 தங்கமும், தடகளத்தில் 6 தங்கமும் வென்றுள்ளது. அதே நேரத்தில், ஒட்டுமொத்தமாக தடகளத்தில் அதிகபட்சமாக 29 பதக்கங்களையும், துப்பாக்கிச் சுடுதலில் 22 பதக்கங்களையும் இந்தியா வென்றுள்ளது. அக்டோபர் 8 ஆம் தேதி போட்டிகள் நடக்க உள்ள நிலையில், இந்திய விளையாட்டு வீரர்கள் மேலும் பல போட்டிகளில் பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.