23 வயதில் பத்மஸ்ரீ வென்று புதிய சரித்திரம் படைத்த பாரா தடகள சாம்பியன் பிரவீன் குமார்
செய்தி முன்னோட்டம்
இந்தியப் பாரா தடகள உலகின் அசாத்திய நாயகனும், பாராலிம்பிக் தங்கம் வென்ற சாம்பியனுமான 23 வயது இளம் வீரர் பிரவீன் குமாருக்கு விளையாட்டுத் துறையில் செய்த சாதனைக்காக மத்திய அரசு 'பத்மஸ்ரீ' விருதை அறிவித்துள்ளது. வரும் மே 25 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவரிடம் இந்த விருதை வழங்க உள்ளார். இதன் மூலம் மிகக் குறைந்த வயதில் நாட்டின் உயரிய குடிமை விருதைப் பெறும் பாரா தடகள வீரர்களில் ஒருவராக அவர் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
விருதுகள்
5 ஆண்டுகளில் மூன்று தேசிய விருதுகள்
உத்தரப் பிரதேசத்தின் ஜேவார் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார், கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியாவின் மிக உயரிய மூன்று விளையாட்டு விருதுகளையும் வென்று சாதனையைப் படைத்துள்ளார். 2021 அர்ஜுனா விருது: டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் (T64 உயரம் தாண்டுதல்) வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக அதே ஆண்டில் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. 2025 கேல் ரத்னா விருது: 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் 2.08 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதற்காக 2025 ஜனவரியில் நாட்டின் மிக உயரிய 'மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா' விருது இவருக்கு வழங்கப்பட்டது. 2026 பத்மஸ்ரீ விருது: 'அறியப்படாத சாதனையாளர்கள்' பிரிவின் கீழ் இவருக்கு தற்போது பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சாதனை
மாற்றுத்திறனைக் கடந்த அசாத்திய சாதனை
2003-ஆம் ஆண்டு பிறந்த பிரவீன் குமாருக்கு ஒரு கால் மற்றொரு காலை விடக் குட்டையானது. இருப்பினும், தனது உடல்நிலைக் குறைபாட்டைத் தனது பலவீனமாக மாற்றாமல், உயரம் தாண்டுதலைத் தனது பலமாக மாற்றிக் காட்டினார். கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற 20-வது தேசிய பெடரேஷன் கப் ஜூனியர்(U-20) தடகளப் போட்டியில், மாற்றுத்திறனாளி அல்லாத சாதாரண வீரர்களுடன் போட்டியிட்டு தங்கம் வென்ற முதல் இந்தியப் பாரா தடகள வீரர். தற்போது உலகின் நம்பர் 1 வீரராக இருக்கும் இவர், 2022 ஆசிய பாரா போட்டிகளிலும் தங்கம் வென்றுள்ளார். நாளொன்றுக்கு 7- 8 மணி நேரம் வரை தீவிரப் பயிற்சி எடுத்து வரும் பிரவீன் குமார், ஆசிய சாதனையான 2.1 மீட்டர் உயரத்தைத் தாண்டுவதை இலக்காகக் கொண்டுள்ளார்.
#PeoplesPadma
#PeoplesPadma என்பது என்ன?
அடித்தட்டு சாதனையாளர்களுக்குப் பொது மற்றும் சுய பரிந்துரைகளை ஊக்குவிப்பதன் மூலம் பத்ம விருதுகளை மேலும் அனைவரையும் உள்ளடக்கியதாக மாற்றுவதற்காக, இந்திய அரசால் #PeoplesPadma அல்லது மக்கள் பத்ம முயற்சி தொடங்கப்பட்டது. இதன் மூலம், தேசிய அளவில் அறியப்பட்ட ஆளுமைகளுடன், அதிகம் அறியப்படாத நாயகர்களையும் அடித்தட்டுப் பங்களிப்பாளர்களையும் முன்னிலைப்படுத்துகிறது. இந்த விருதுகள், இனம், தொழில், பதவி அல்லது பாலினம் என்ற பாகுபாடின்றி, அனைத்துத் துறைகளிலும் உள்ள சிறப்புகளை அங்கீகரிக்கின்றன. வெளிச்சத்திற்கு வராமல், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய தனிநபர்களைக் கௌரவிப்பதன் மூலம், பத்மா விருதுகளை 'PeoplesPadma'வாக மாற்றுவதே இதன் பரந்த நோக்கமாகும்.