சர்வதேச சந்தைக்காக இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்கும் டாடா: வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு
அடுத்த இரண்டரை ஆண்டுகளில், உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கும் பணியை டாடா குழுமம் தொடங்கும் என அதிகாரபூர்வமாக இன்று அறிவித்தார், தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர். இந்த நடவடிக்கை மூலம், இந்தியாவின் உற்பத்தித் திறன் விரிவடைந்துள்ளது என்பதனையும், தனது சர்வேதேச சந்தையின் மொபைல் உற்பத்திக்காக, சீனாவை விட்டு முழுவதுமாக வெளியேறும் ஆப்பிளின் அதிரடி நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
விஸ்ட்ரானின் செயல்பாடுகளை கையகப்படுத்தும் டாடா
டாடா குழுமத்தின் போர்டு மீட்டிங்கில், ஆப்பிள் நிறுவனத்தின் சப்ளையரான, விஸ்ட்ரான் கார்ப் நிறுவனத்தின் செயல்பாடுகளை கையகப்படுத்துவதாக அறிவித்தது. அமைச்சர் சந்திரசேகர், "இந்திய நிறுவனங்களின் தலைமையில், இந்தியாவிலிருந்து உலகளாவிய விநியோகச் சங்கிலியை உருவாக்குவதற்கு" விஸ்ட்ரானுக்கு நன்றி தெரிவித்தார் மற்றும் உலகளாவிய இந்திய மின்னணு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, இந்திய அரசாங்கத்தின் ஆதரவு உள்ளதென்றும் உறுதி கூறினார். ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான நம்பகமான மையமாக இந்தியா உருவெடுத்ததற்கு பிரதமர் நரேந்திர மோடியின் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டமே காரணம் என்றும் அமைச்சர் தனது அறிக்கையில் கூறினார்.
எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் இ-காமர்ஸ் துறையில் விரிவாக்கம் செய்யும் டாடா
உலகளாவிய பரந்த அளவிலான தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்காக நன்கு நிறுவப்பட்ட டாடா குழுமம், சமீப காலங்களில் மின்னணு உற்பத்தி மற்றும் இ-காமர்ஸில் வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது. இக்குழுமம் ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள அதன் தொழிற்சாலைகளில் ஐபோன்களின் உறைகளை (Cases) உற்பத்தி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வருட கால பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தற்போது கர்நாடகாவில் உள்ள விஸ்ட்ரான் கார்ப் நிறுவனத்தின் ஆலையை கையகப்படுத்துவதன் மூலம், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறையில் டாடாவின் இருப்பு மேலும் வலுப்படுகிறது.