துயில் கொள்ளவிருக்கும் பிரஞ்யான் ரோவர்.. முடிவுக்கு வரும் சந்திரயான் 3 திட்டம்?
கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் நாள், நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது சந்திரயான் 3. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தென்துருவப் பகுதியின் மேற்பரப்பில் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தன சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்டிருந்த விக்ரம் லேண்டரும், பிரஞ்யான் ரோவரும். நிலவின் ஒரு நாள் கணக்கிற்கு (பூமியின் நாட்கள் கணக்கில் 14 நாட்கள்) மேற்கூறிய இரண்டு உபகரணங்களும் செயல்படும் வகையிலேயே சந்திரயான் 3 திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. தற்போது நிலவின் ஒரு நாள் முடிவிற்கு வரவிருக்கும் நிலையில், தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த பணிகளைை முடித்து பிரஞ்யான் ரோவர் துயில் கொள்ளவிருப்பதாகத் எக்ஸில் பதிவிட்டிருக்கிறது இஸ்ரோ. மேலும், இதுவரை பிரஞ்யான் சேகரித்த தகவல்களானது விக்ரம் லேண்டர் மூலம் பூமிக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.
ஏன் துயில் நிலைக்குச் செல்லவிருக்கிறது பிரஞ்யான் ரோவர்?
நிலவின் தென்துருவப் பகுதியில் பகல் நேரத்தில் நிலவும் வெப்பத்தை விட இரவு நேரம் மிகக் குறைவாகவே வெப்பம் இருக்கும். -230 டிகிரி செல்சியஸூக்கும் கீழே கூட நிலவின் இரவு நேரக் குளிர் இருக்குமாம். சூரிய ஒளியின் உதவியுடன் இயக்கும் லேண்டர் மற்றும் ரோவரால் சூரிய ஒளி இல்லாமல் இயங்க முடியாது. மேலும், இந்தக் கடும் குளிரில் லேண்டர் மற்றும் ரோவரில் பொருத்தப்பட்டிருக்கும் கருவிகள் பழுதடைவற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே தான் ஒரே ஒரு பகல் மட்டும் செயல்படும் வண்ணம் சந்திரயான் 3 திட்டம் வடிவமைக்கப்பட்டது. தற்போது ரோவரின் பேட்டரிக்கள் முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்டன், அதன் பிற அறிவியல் கருவிகள் அணைக்கப்பட்டிருக்கின்றன.
அடுத்து பிரஞ்யான் ரோவர் செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?
நிலவின் தென் துருவப் பகுதியில் அடுத்து செப்டம்பர் 22ம் நாள் தான் சூரிய உதயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சூரிய உதயத்தின் போது, சூரிய ஒளியைப் பெறும் வகையில் பிரஞ்யான் ரோவரின் சூரிய ஒளித் தகடுகள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன. நிலவின் கடும் குளிர் இரவைக் கடந்து, அடுத்த சூரிய உதயத்தின் போது பிரஞ்யான் ரோவர் செயல்பட்டால், மேற்கொண்டு நிலவில் பரிசோதனைகள் மேற்கொள்ளத் திட்டமிடப்படும். இல்லையேல், இந்தியாவின் தூதுவராக நிலவின் தென் துருவத்திலேயே நிரந்தரமாக பிரஞ்யான் ரோவர் துயில் கொள்ளும். அடுத்த சூரிய உதயத்தின் போது பிரஞ்யான் ரோவர் செயல்படாத பட்சத்தில், இதுவே சந்திரயான் 3 திட்டத்தின் முடிவாக இருக்கும். சூரிய உதயத்திற்குக் காத்திருப்போம்!