Page Loader
விண்வெளியில் மீண்டும் மலர்ந்த ஸின்னியா மலரின் புகைப்படத்தைப் பகிர்ந்த நாசா
சர்வதேச விண்வெளி நிலையத்தில் மீண்டும் மலர்ந்த ஸின்னியா மலர்

விண்வெளியில் மீண்டும் மலர்ந்த ஸின்னியா மலரின் புகைப்படத்தைப் பகிர்ந்த நாசா

எழுதியவர் Prasanna Venkatesh
Jun 13, 2023
05:31 pm

செய்தி முன்னோட்டம்

பூமியைத் தவிர விண்வெளியின் பிற கோள்கள், சந்திரன்கள் மற்றும் பகுதிகளில் தாவரங்களை விளைவிக்க முடியுமா என்ற சோதனை பல காலமாகவே நடைபெற்று வருகிறது. இது குறித்த ஓரளவு பாடங்களை நாசா கற்றிருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. காரணம், 2016-ல் முதல் முறையாக சர்வதேச விண்வெளி மையத்தில் ஸின்னியா (Zinnia) என்ற மலரை பூக்க வைத்து சாதனை படைத்தது நாசா. நாசாவின் வெஜ்ஜி (Veggie) திட்டத்தின் கீழ் இந்த சாதனை சாத்தியமானது. அந்தப் பூவை மலரவைத்த சாதனை அப்போது சர்வதேச விண்வெளி மையத்தில் இந்த திட்டத்திற்கு பொறுப்பேற்றிருந்த ஸ்காட் கெல்லியையே சாரும். தற்போது மீண்டும் அந்தப் பூ விண்வெளியில் பூக்க, அதனைத் தங்கள் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது நாசா.

நாசா

நாசாவின் வெஜ்ஜி திட்டம்: 

'விண்வெளியில் மலரை பூக்க வைக்க முயற்சியெடுப்பது வெறும் காட்சிப்படுத்துதலுக்காக அல்ல. விண்வெளியில் ஒரு செடி எப்படி வளர்கிறது என்பதை கண்டறிவதன் மூலம், பூமியைத் தவிர பிற பகுதிகளிலும் செடிகளை வளர்க்க உதவும். சந்திரன் மற்றும் செவ்வாயில் நீண்ட காலத் திட்டங்களை வகுக்கும் போது, விண்வெளி வீரர்களுக்கான உணவை தயாரித்துக் கொள்ளக்கூட அவை உதவிகரமாக இருக்கலாம். இந்த ஸின்னியா மலர் மட்டுமல்ல, தக்காளி மற்றும் கீரை உள்ளிட்ட சில வகை காய்கறிகளையும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயிரிட்டு அறுவடை செய்திருக்கின்றனர் விண்வெளி வீரர்கள்', என தங்கள் இன்ஸ்டாகிராம் பதிவில், இந்த மலர் மற்றும் விண்வெளி திட்டம் குறித்த தகவலையும் பகிர்ந்திருக்கிறது நாசா.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post