பூமியில் விழும் 600 கிலோ எடை கொண்ட நாசா விண்கலம்; இது யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்?
செய்தி முன்னோட்டம்
நாசாவின் வேன் ஆலன் புரோப் A (Van Allen Probe A) விண்கலம், விண்வெளியில் தனது 14 ஆண்டுகால பயணத்தை முடித்துக் கொண்டு பூமியில் விழவுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, 2012-ம் ஆண்டு விண்வெளியில் உள்ள கதிர்வீச்சு மண்டலங்களை ஆய்வு செய்வதற்காக 'வேன் ஆலன் புரோப்ஸ்' (Van Allen Probes) என்ற இரட்டை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது. இதில் 'புரோப் ஏ' (Probe A) விண்கலம், தற்போது தனது சுற்றுப்பாதையை முடித்துக்கொண்டு பூமியில் விழவுள்ளது.
நாசா
முன்கூட்டியே பூமியில் விழும் புரோப் A
முதலில் இந்த விண்கலம் 2034-ம் ஆண்டையொட்டியே பூமியில் விழும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், சமீபகாலமாக சூரியனின் செயல்பாடுகள் (Solar Activity) அதிகரித்துள்ளதால், பூமியின் வளிமண்டலத்துடன் உராய்ந்து, வேகம் குறைந்து, திட்டமிட்டதை விட பல ஆண்டுகள் முன்னதாகவே பூமியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. சுமார் 600 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம், பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது உராய்வு வெப்பத்தினால் பெரும்பாலும் எரிந்து சாம்பலாகிவிடும் என நாசா தெரிவித்துள்ளது. இருப்பினும், சில சிறிய பாகங்கள் எரிந்து முடியாமல் பூமியின் மேற்பரப்பில் விழ வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்கலம்
பூமியில் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
பொதுமக்களுக்கு இதனால் ஆபத்து ஏற்படுமா என்ற கேள்விக்கு, பூமியில் உள்ள எவருக்காவது இதனால் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 4,200-ல் 1 பங்கு மட்டுமே, அதாவது மிகவும் குறைவு என்று நாசா உறுதியளித்துள்ளது. பூமியின் பெரும்பகுதி கடலால் சூழப்பட்டுள்ளதால், எஞ்சிய பாகங்கள் கடலில் விழவே அதிக வாய்ப்புகள் அதிகம். அடுத்த இரண்டு நாட்களில் பூமியின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இந்தப் பாகங்கள் விழலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா
வான் ஆலன் புரோப்
இந்த விண்கலம் பூமியைச் சுற்றியுள்ள ஆபத்தான கதிர்வீச்சு பட்டைகளை ஆராய்ந்து, விண்வெளி வானிலை மற்றும் செயற்கைக்கோள்களைப் பாதுகாக்கும் முறைகள் குறித்து பல முக்கியத் தரவுகளை வழங்கியுள்ளது. 2012ல் விண்ணில் செலுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே செயல்படும் வகையில் முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 2019-ம் ஆண்டு எரிபொருள் தீரும் வரை தகவல்களை வழங்கி வந்தது இந்த விண்கலம். அதன்பின்பு பூமியை சுற்றி வந்து கொண்டிருந்த நிலையில், 2034ல் பூமியில் விழும் என எதிர்பார்க்கப்பட்டு, தற்போதே விழவுள்ளது. மற்றொரு விண்கலமான புரோப் B, 2030-க்கு முன்பாக பூமியில் விழாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.