வைரலாகும் நாராயண மூர்த்தியின் டீப்ஃபேக் வீடியோ, பொதுமக்களை எச்சரிக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனர்
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, தான் தானியங்கு வர்த்தக செயலிகளில் முதலீடு செய்ததாகக்(automated trading applications), இணையத்தில் பரவி வரும் சில டீப்ஃபேக் வீடியோக்கள சுட்டிக்காட்டி, பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்கும் படிகேட்டுக்கொண்டார். எலன் மஸ்க்குடன் கூட்டாளியாக இருப்பதாகக் கூறும் முதலீட்டுத் தளமான குவாண்டம் ஏஐயை, நாராயண மூர்த்தி விளம்பரப்படுத்தும் படியான டீப்ஃபேக் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இவற்றை போலியென நாராயண மூர்த்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். "சமீபத்திய மாதங்களில், பிடிசிஏஐ ஈவெக்ஸ், பிரிட்டிஷ் பிட்காயின், பிட் லைட் சிங்க், என்ற தானியங்கு வர்த்தக பயன்பாடுகளில் நான் விளம்பரப்படுத்துகிறேன் அல்லது முதலீடு செய்துள்ளேன், என்று சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் பல்வேறு வலைப்பக்கங்கள் மூலம் பல போலி செய்திகள் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளன" எனவும்,
டாடாவை தொடர்ந்து டீப்ஃபேக்கில் சிக்கிய நாராயண மூர்த்தி
"மேலும் சில டீப்ஃபேக் படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி போலி நேர்காணல்களையும் வெளியிடுகின்றன" என பதிவிட்டிருந்தார். மேலும், தான் எந்த நிறுவனத்தையும் விளம்பரப்படுத்துவோ அல்லது முதலீடு செய்யவில்லை எனவும், இது குறித்த போலி தகவல்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் எனவும், சம்பந்தப்பட்ட நபர்களிடம் இது குறித்து புகார் அளிக்கவும் அவர் கேட்டுக்கொண்டார். அண்மையில், டாடா குழுமத்தின் ரத்தன் டாடா இதேபோன்று "குறைந்த அபாயத்தில், 100% உத்தரவாதம்" என ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்ய வலியுறுத்துவது போன்ற வீடியோ பரவி வந்தது. இதை ரத்தன் டாடா போலி என கண்டறிந்து, மக்களை விழிப்புடன் இருக்கும்படி எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.