உலகம் முழுவதும் 2 லட்சம் பேருக்கு இன்ஸ்டாகிராம் சேவை பாதிப்பு!
கடந்த நான்கு நாட்களில் இரண்டாவது முறையாக இன்ஸ்டாகிராம் செயலி செயலிழந்திருக்கிறது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு நேற்று இரவிலிருந்து இன்ஸ்டாகிராம் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராம் சேவை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பயனாளர்கள் பலரும் ட்விட்டரில் அது குறித்து பதிவுகளை பதிவு செய்தனர். இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் பலருக்கு லாக் இன் செய்ய முடியவில்லை, பலருக்கு குறுஞ்செய்திகளை அனுப்ப முடியவில்லை, பலருடைய நியூஸ் ஃபீடு லோடு ஆகவில்லை என குற்றம் சாட்டியிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை இன்ஸ்டாகிராம் சேவையில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் நீக்கப்பட்டுவிட்டதாவும், தடங்களுக்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருக்கிறார் அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர். கடந்த மார்ச் 9-ம் தேதியும் 30,000 பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் சேவை பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.