ஈமெயில் கண்டுபிடித்த ஷிவா அய்யாதுரை, ட்விட்டர் CEO பதவிக்கு, எலன் மஸ்க்கிடம் விண்ணப்பம்
மின்னஞ்சல் எனும் ஈமெயிலை கண்டுபிடித்த இந்தியரான டாக்டர் சிவா அய்யாதுரை, சமீபத்தில் எலன் மஸ்க்கிற்கு ஒரு வினோதமான ட்வீட் செய்திருந்தார். அதில், ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், தான் எம்ஐடி-யில் நான்கு பட்டங்கள் பெற்றுள்ளதாகவும், ஏழு வெற்றிகரமான உயர் தொழில்நுட்ப மென்பொருள் நிறுவனங்களை உருவாக்கியதாகவும், ட்விட்டர் CEO பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறை என்ன என்றும் கேட்டுள்ளார். இந்த ட்வீட்-ஐ மஸ்க்கிற்கு நேரடியாக டேக் செய்து, ட்வீட் செய்துள்ளார். அய்யாதுரையின் ட்வீட் உடனடியாக பலர் கவனத்தை ஈர்த்தது. பலர் அவரது வேலை விண்ணப்பத்திற்கு, ஆதரவு தெரிவித்து இருந்தனர். எனினும், மஸ்கிடம் இருந்து இதுவரையில் எந்த பதிலும் இல்லை.
ட்விட்டர் ceo பதவிக்கு விண்ணப்பித்த மின்னஞ்சல் கண்டுபிடிப்பாளர்
ட்விட்டர் ceo பதவிக்கு விண்ணப்பித்த மின்னஞ்சல் கண்டுபிடிப்பாளர்
சென்ற வாரம், மஸ்க் ஒரு கருத்துக்கணிப்பு நிகழ்த்தி இருந்தார். அதில் "எத்தனை பேர் நான் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலக ஆதரவு தெரிவிக்கிறீர்கள்?" எனக்கேட்டிருந்தார். அந்த கருத்துக்கணிப்புக்கு, 57 %, அவர் பதவி விலகுவதை வரவேற்றனர். பின்னர் மஸ்க், ஒரு தகுந்த நபரை தனக்கு பதிலாக தலைமை நிர்வாக அதிகாரியாக தேடிக்கொண்டிருப்பதாகவும், கிடைத்தவுடன் பதவி விலக உள்ளதாகவும் தெரிவித்தார். பலர் அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். அய்யாதுரை அதன் தொடர்ச்சியாக தான் இந்த வேடிக்கையான ட்வீட் செய்துள்ளார். அமெரிக்க வாழ் இந்தியரான, டாக்டர் சிவா அய்யாதுரை MIT பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். உலகெங்கும் உபயோகிக்கப்படும் மின்னஞ்சலை இவர் தனது பதின் வயதில் கண்டுபிடித்தார் என செய்திகள் கூறுகின்றன.