Page Loader
வியாழனை ஆய்வு செய்ய விண்கலம்.. வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ஐரோப்பா!
வியாழனை ஆய்வு செய்ய விண்கலத்தை ஏவிய ஐரோப்பா

வியாழனை ஆய்வு செய்ய விண்கலம்.. வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ஐரோப்பா!

எழுதியவர் Prasanna Venkatesh
Apr 14, 2023
06:27 pm

செய்தி முன்னோட்டம்

பல தடைகளுக்குப் பிறகு வியாழன் (Jupiter) கோளின் நிலவுகளான யூரோப்பா, காலிஸ்டோ மற்றும் கானிமீடு ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக JUICE (Jupiter Icy Moon Explorer) விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம். ஏரியன் 5 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டிருக்கும் இந்த விண்கலம், பூமி, செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய கோள்களின் காந்தப்புலங்களின் உதவியுடன் பயணித்து எட்டு வருடங்களுக்குப் பிறகு 2031-ல் தான் வியாழனை சென்றடையுமாம். இந்த விண்கலத்தில், அந்த நிலவுகளை ஆய்வதற்காக 10 விதமான அறிவியல் சோதனைக் கருவிகளை பொருத்தி விண்ணில் செலுத்தியிருக்கிறது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம். அமெரிக்க மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஆய்வு மையங்களும் சில சோதனைக் கருவிகளைப் பொருத்துவதில் பங்கெடுத்திருக்கின்றன.

விண்வெளி

இந்தத் திட்டத்தின் நோக்கம் என்ன?

வியாழனில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா அல்லது இதற்கு முன் உயிர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வது. மேற்கூறிய வியாழனின் மூன்று நிலவுகளின் பணிபடர்ந்த வெளிப்புறத்தைக் கடந்து உள்ளே நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்வது. வியாழன் மற்றும் அதன் நிலவுகளுக்கு இடையேயான சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொள்வது தான் இந்த திட்டத்தின் முக்கியமான நோக்கம். யூரோப்பாவை 2 முறை கடந்து சென்றும், காலிஸ்டோவை 21 முறை கடந்து சென்றும் ஆய்வு செய்யவிருக்கும் இந்த விண்கலம், இறுதியாக 2035 செப்டம்பரில் கானிமீடில் தரையிறங்குவதுடன் இந்தத் திட்டம் முடிவுக்கு வரும் எனத் தெரிவித்திருக்கிறது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம்.