"நீங்கள் இறந்துவிட்டீர்களா?" - சீனாவை அதிரவைக்கும் விசித்திரமான செயலி
செய்தி முன்னோட்டம்
சீனாவில் நிலவி வரும் "தனிமைத் தொற்று"(Loneliness Epidemic) காரணமாக, "Si Le Me"(தமிழில்:"நீங்கள் இறந்துவிட்டீர்களா?") என்ற செயலி அந்நாட்டின் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முதலிடத்தை பிடித்துள்ளது. தனிமையில் வசிப்பவர்கள் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், அதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பயனர் ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில்(வழக்கமாக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை) செயலியை திறந்து அதில் உள்ள ஒரு பொத்தானை அழுத்த வேண்டும். இதன் மூலம் அவர் உயிரோடு இருப்பதை உறுதி செய்யலாம். ஒருவேளை பயனர் அந்தப் பொத்தானை அழுத்தத் தவறினால், செயலி தானாகவே அவர் ஏற்கனவே பதிவு செய்துள்ள அவசர காலத் தொடர்பு நபருக்கு(Emergency Contact) மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை அனுப்பும்.
காரணம்
இப்படி ஒரு விசித்திர செயலி உருவாக்க காரணமென்ன?
சீனாவில் தற்போது சுமார் 12.5 கோடிக்கும் அதிகமானோர் தனிமையில் வசித்து வருகின்றனர். 2030-ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை 20 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. "யாரும் கவனிக்காத நிலையில் உயிரிழந்து விடுவோமோ" என்ற பயமே இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரை இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்யத் தூண்டியுள்ளது. வெறும் 1,000 யுவான் செலவில் Gen-Z தலைமுறை இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்தச் செயலி, தற்போது சர்வதேச அளவிலும் கவனம் ஈர்த்து வருகிறது. இதன் பெயரில் உள்ள எதிர்மறையான தொனி விமர்சனங்களுக்கு உள்ளானாலும், தற்போதைய சமூகத்தில் நிலவும் தனிமையையும் பாதுகாப்பின்மையையும் இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.