LOADING...
பொதுமக்கள் கவனத்திற்கு: ஓலா, உபருக்கு டஃப் கொடுக்கும் பாரத் டாக்ஸி! ஜனவரி 1 முதல் தொடக்கம்
ஜனவரி 1 முதல் பாரத் டாக்ஸி டெல்லியில் தொடக்கம்

பொதுமக்கள் கவனத்திற்கு: ஓலா, உபருக்கு டஃப் கொடுக்கும் பாரத் டாக்ஸி! ஜனவரி 1 முதல் தொடக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 29, 2025
02:27 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் ஓலா மற்றும் உபர் போன்ற தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக, மத்திய அரசின் கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் பாரத் டாக்ஸி என்ற புதிய சேவை தொடங்கப்பட உள்ளது. இது மத்திய அரசின் கூட்டுறவு அமைச்சகத்தால் முன்னெடுக்கப்படும் ஒரு கூட்டுறவு அடிப்படையிலான டாக்ஸி சேவையாகும். இதன் முக்கிய நோக்கம் ஓட்டுநர்களைத் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, அவர்களை இந்த அமைப்பின் உரிமையாளர்களாக மாற்றுவதாகும்.

சிறப்பம்சங்கள்

முக்கிய சிறப்பம்சங்கள்

தனியார் செயலிகள் ஒவ்வொரு பயணத்திற்கும் கணிசமான கமிஷன் தொகையை எடுத்துக் கொள்கின்றன. ஆனால், பாரத் டாக்ஸியில் ஓட்டுநர்கள் ஈட்டும் முழுத் தொகையும் (80% முதல் 100% வரை) அவர்களுக்கே சென்றடையும். மழைக்காலங்களிலோ அல்லது போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நேரங்களிலோ தனியார் செயலிகள் விலையை உயர்த்துவது வழக்கமாக உள்ளது. ஆனால், பாரத் டாக்ஸியில் இத்தகைய மறைமுக விலையேற்றம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவை சஹகார் டாக்ஸி கூட்டுறவு லிமிடெட் மூலம் இயக்கப்படுகிறது. அமுல், இஃப்கோ, நபார்டு போன்ற முக்கிய கூட்டுறவு நிறுவனங்கள் இதற்குப் பின்னணியில் உள்ளன.

தொடக்கம்

எப்போது தொடங்கும்?

பாரத் டாக்ஸி வரும் ஜனவரி 1, 2026 முதல் டெல்லி-என்சிஆர் பகுதியில் முழுமையாகத் தொடங்கப்பட உள்ளது. டெல்லிக்கு அடுத்து மற்ற முக்கிய இந்திய நகரங்களிலும் இந்தச் சேவை படிப்படியாக விரிவுபடுத்தப்படும். தற்போது இதன் பீட்டா செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கிடைக்கிறது. இந்தச் செயலி அரசின் டிஜிலாக்கர் மற்றும் உமங் போன்ற சேவைகளுடன் இணைக்கப்பட உள்ளது. அவசர கால உதவிக்காக 'SOS' பட்டன் வசதி மற்றும் டெல்லி காவல்துறையுடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இதில் இருக்கும். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம். ஓட்டுநர்களுக்கு அதிக வருமானத்தையும், பயணிகளுக்குக் குறைந்த விலையில் பாதுகாப்பான பயணத்தையும் வழங்குவதே இத்திட்டத்தின் அடிப்படை இலக்காகும்.

Advertisement