
இந்தியாவில் ஐபோன் மற்றும் மேக்புக் பழுதுபார்ப்புகளுக்காக டாடாவுடன் கைகோர்த்தது ஆப்பிள்
செய்தி முன்னோட்டம்
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன்கள் மற்றும் மேக்புக்களுக்கான விற்பனைக்குப் பிந்தைய பழுதுபார்ப்பு சேவைகளைக் கையாளும் பொறுப்பை டாடா குழுமத்திடம் ஒப்படைத்துள்ளது.
இது ஆப்பிளின் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்திய கூட்டு நிறுவனத்தின் பங்கை கணிசமாக ஆழப்படுத்துவதைக் குறிக்கிறது.
ராய்ட்டர்ஸ் மேற்கோள் காட்டிய ஆதாரங்களின்படி, விஸ்ட்ரான் துணை நிறுவனமான ஐசிடி சர்வீஸ் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸிடமிருந்து பழுதுபார்ப்பு நடவடிக்கைகளை டாடா கையகப்படுத்தி, அதன் கர்நாடக ஐபோன் அசெம்பிளி ஆலையிலிருந்து இந்த சேவைகளை நிர்வகிக்கும்.
சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, அதன் உற்பத்தி மற்றும் சர்வீஸ் செயல்பாடுகளை இந்தியாவிற்கு மாற்றுவதற்கான ஆப்பிளின் பரந்த உத்தியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது.
இந்தியா
இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தை
இப்போது உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையான இந்தியா, ஐபோன் விற்பனையில் விரைவான வளர்ச்சியைக் காண்கிறது.
கவுன்ட்டர்பாயிண்ட் ரிசர்ச் படி, ஐபோன் விற்பனை 2023 இல் 11 மில்லியன் யூனிட்களை எட்டி, ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிளின் பங்கை 7% அளவிற்கு உயர்த்தியது.
முன்னர் 2020 இல் இது வெறும் 1% மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விரிவடையும் சந்தை பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் சேவைகளுக்கான தேவையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் புதுப்பிக்கப்பட்ட சாதனங்களை நேரடியாக விற்பனை செய்ய ஆப்பிள் தொடங்குவதற்கான ஒரு படியாக டாடாவுடனான இந்த கூட்டாண்மையை தொழில்துறை ஆய்வாளர்கள் கருதுகின்றனர், இது ஏற்கனவே அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள ஒரு மாதிரியாகும்.