'மௌஞ்சாரோ பிரைட்ஸ்': திருமணத்திற்காக வாராந்திர ஊசி மூலம் உடல் எடையைக் குறைக்கும் புதிய மோகம்; ஆபத்து என்ன?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் திருமணங்கள் என்பது வெறும் இரு மனங்கள் இணைவது மட்டுமல்ல, அது குடும்பங்களின் கௌரவம் மற்றும் சமூக அந்தஸ்து சார்ந்த ஒரு பெரும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், திருமண நாளில் மிக அழகாகவும் ஸ்லிம்மாகவும் தெரிய வேண்டும் என்ற அழுத்தம் மணப்பெண்கள் மற்றும் மணமகன்கள் மத்தியில் ஒரு புதிய தேடலை உருவாக்கியுள்ளது. இதையடுத்து இப்போது 'மௌஞ்சாரோ பிரைட்' (Mounjaro Bride) என்ற பெயரில் பிரத்யேக எடைக் குறைப்பு திட்டங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. சமூக வலைதளங்கள் வாயிலாக இந்த மருந்துகள் விளம்பரப்படுத்தப்படுவதால், டயட் மற்றும் உடற்பயிற்சிக்கு மாற்றாக ஒரு குறுக்கு வழியாக மக்கள் இதனைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
கவலை
மருத்துவர்களின் கவலையும் நோயாளிகளின் அனுபவமும்
உடல் பருமன் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளில் சுமார் 20 சதவீதத்தினர் திருமணத்திற்குத் தயாராகும் மணப்பெண்கள் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மும்பையைச் சேர்ந்த அதிதி என்ற 26 வயது இளம்பெண், தனது திருமணத்திற்கு முன்பு மௌஞ்சாரோ ஊசி மூலம் 10 கிலோ எடையைக் குறைத்துள்ளார். உடற்பயிற்சி மற்றும் டயட் மூலம் பலன் கிடைக்காத நிலையில், இந்த மருந்துகள் தனக்கு ஒரு தன்னம்பிக்கையைக் கொடுத்ததாக அவர் கூறுகிறார். ஹைதராபாத்தைச் சேர்ந்த அக்சிதா மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த பிரியா போன்ற பல பெண்களும் இதே போன்ற அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். குறிப்பாகத் திருமணத் தரகர்கள் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் உடல் தோற்றத்தை வைத்துப் பெண் பார்ப்பது போன்ற சமூக அழுத்தங்களே இவர்களை இதுபோன்ற மருந்துகளை நோக்கித் தள்ளுகின்றன.
விலை விவரங்கள்
சந்தையில் நிலவும் போட்டி மற்றும் மருந்துகளின் விலை விவரங்கள்
இந்தியாவில் எலி லில்லி நிறுவனத்தின் மௌஞ்சாரோ மற்றும் நோவோ நார்டிஸ்க் நிறுவனத்தின் விகோவி ஆகிய மருந்துகள் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. 2030 ஆம் ஆண்டிற்குள் இந்த மருந்துகளின் சந்தை மதிப்பு 8,000 கோடி ரூபாயைத் தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மௌஞ்சாரோ ஊசியின் ஒரு மாதக் கட்டணம் அதன் அளவைப் பொறுத்து 13,125 ரூபாய் முதல் 25,781 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. அதே சமயம், நோவோ நிறுவனத்தின் விகோவி ஊசி 5,660 ரூபாய் முதல் 16,400 ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கிறது. அண்மையில் இந்த மருந்துகளுக்கான காப்புரிமை காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்திய மருந்து நிறுவனங்கள் இவற்றை இன்னும் மலிவான விலையில் சந்தைப்படுத்தத் தொடங்கியுள்ளன.
எச்சரிக்கை
மருத்துவ எச்சரிக்கையும் முறையான பயன்பாடும்
இந்த மருந்துகள் அடிப்படையில் உடல் பருமன் அல்லது அது சார்ந்த நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற மருத்துவக் குறைபாடு உள்ளவர்களுக்காக மட்டுமே பரிந்துரைக்கப்படுகின்றன. ஒரு தகுதி வாய்ந்த மருத்துவரின் மேற்பார்வையின்றி இவற்றை அழகுக்காகப் பயன்படுத்துவது ஆபத்தானது என்று எலி லில்லி மற்றும் நோவோ நார்டிஸ்க் ஆகிய நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியமும் இது போன்ற மருந்துகளின் அங்கீகரிக்கப்படாத விற்பனை மற்றும் விளம்பரங்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. ஒரு தற்காலிகத் தீர்வாக இது தெரிந்தாலும், முறையான வாழ்க்கை முறை மாற்றங்கள் இன்றி இந்த மருந்துகளைப் பயன்படுத்துவது நீண்ட கால ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.