LOADING...
கொளுத்தும் வெயிலிலும் ஏசி இல்லாமல் நிம்மதியாக தூங்க சில எளிய வழிகள்
புழுக்கமும், வெப்பமும் நம்மை நிம்மதியாகத் தூங்க விடுவதில்லை

கொளுத்தும் வெயிலிலும் ஏசி இல்லாமல் நிம்மதியாக தூங்க சில எளிய வழிகள்

எழுதியவர் Venkatalakshmi V
May 22, 2026
05:51 pm

செய்தி முன்னோட்டம்

பகல் நேர வெயிலின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும், கோடைக் காலத்தில் இரவு நேரங்களில் நிலவும் கடுமையான புழுக்கமும், வெப்பமும் நம்மை நிம்மதியாகத் தூங்க விடுவதில்லை. மனித உடல் தூங்குவதற்கு ஏதுவாக அதன் வெப்பநிலையைக் குறைத்துக் கொள்ள முயலும் போது, சுற்றியுள்ள வெப்பமான சூழல் அதற்குத் தடையாக மாறுகிறது. இதனால் தூக்கமின்மை, சோர்வு, மன எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. "நிறையத் தண்ணீர் குடியுங்கள், குளுமையான விஷயங்களை யோசியுங்கள்" போன்ற பொதுவான ஆலோசனைகளைத் தாண்டி, கொளுத்தும் கோடை இரவுகளிலும் ஏசி இல்லாமலேயே நிம்மதியாகத் தூங்க உதவும் சில எளிய மற்றும் அறிவியல் ரீதியான நடைமுறை வழிகள் இதோ:

நடைமுறை

அறிவியல் ரீதியான நடைமுறை வழிகள்

இரவில் தூங்குவதற்குச் செல்வதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இது இரத்த நாளங்களைத் திறந்து, உடலின் வெப்பம் சருமத்தின் வழியாக எளிதாக வெளியேற உதவும். வீட்டிற்கு எதிரெதிரே உள்ள இரண்டு ஜன்னல்களைத் திறந்து வைப்பதன் மூலம் சீரான காற்றோட்டத்தை உருவாக்க முடியும். இது அறையிலுள்ள வெப்பக் காற்றை வெளியேற்றி, குளிர்ந்த இரவுக்காற்றை உள்ளே கொண்டு வரும். ஜன்னல்கள் ஒரே பக்கத்தில் இருந்தால், ஒரு டேபிள் ஃபேனின் பின்புறத்தை ஜன்னல் நோக்கி வைத்து, அறையிலுள்ள வெப்பக் காற்றை வெளியேற்றலாம். ஒரு பாத்திரத்தில் ஐஸ் கட்டிகளை நிரப்பி, அதை ஃபேனுக்கு முன்பாக வைப்பதன் மூலம் குளிர்ந்த காற்று அறை முழுவதும் பரவும். வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி அல்லது மூங்கில் துணியால் ஆன பெட்ஷீட்டுகளை பயன்படுத்தவும்.

உணவு

இரவு உணவும், பானங்களும்

இரவில் கனமான உணவுகளை உட்கொள்ளும் போது, அதை ஜீரணிக்க உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரித்து, உடலுக்குள் கூடுதல் வெப்பம் உருவாகும். எனவே, கோடைக் காலத்தில் இரவு நேரங்களில் சாலட்டுகள், பழங்கள், எளிமையான புரத உணவுகள் போன்ற எளிதில் செரிமானமாகும் லேசான உணவுகளைச் சாப்பிட வேண்டும். அதேபோல், மாலை மற்றும் இரவு நேரங்களில் காபி, டீ மற்றும் ஆல்கஹால் போன்ற பானங்களைத் தவிர்க்க வேண்டும். இவை உடலை வறட்சி அடையச் செய்து, வெப்பத்தின் தாக்கத்தை அதிகரிக்கச் செய்யும். அறிவியல் விதிகளின்படி, வெப்பக் காற்று எப்போதும் மேல் நோக்கியே பயணிக்கும். எனவே வெப்பம் தாங்க முடியாத பட்சத்தில், படுக்கையைத் தரையிலேயே விரித்துப் படுக்கலாம். தரையோடு நெருக்கமாகப் படுக்கும் போது அறையின் வெப்பநிலை ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும்.

Advertisement