விஜயகாந்த் உடல் தேமுதிக அலுவலகத்தில் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என தகவல்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த்.
கடந்த 11ம்.,தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய விஜயகாந்த், நேற்று முன்தினம் இரவு மீண்டும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இன்று(டிச.,28) காலை நுரையீரல் ஒவ்வாமை ஏற்பட்ட நிலையில் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையளித்தும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே அவர் காலை 6.10க்கு உயிரிழந்தார்.
அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.
அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர் அவரது உடல் தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது.
நல்லடக்கம்
நாளை(டிச.,29) மாலை 4.45 மணியளவில் நல்லடக்கம்
தொடர்ந்து நாளை(டிச.,29) மாலை 4.45 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதுவரை அவரது உடல் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நேரில் அஞ்சலி செலுத்த வந்த மு.க.ஸ்டாலினிடம் பிரேமலதா விஜயகாந்த், பொது இடத்தில் கேப்டனின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வேண்டும் என்று கோரியதாக தெரிகிறது.
ஆனால் அவரது உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி வளாகத்தில் வைக்க மட்டுமே அனுமதி கிடைத்த நிலையில், அதனை விஜயகாந்த் குடும்பத்தார் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேடு பகுதியிலுள்ள தேமுதிக கட்சி அலுவலகத்திலேயே நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.