Page Loader
வேங்கைவயல் விவகாரம்: 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
இதுவே தமிழக அரசுக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பு என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

வேங்கைவயல் விவகாரம்: 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

எழுதியவர் Sindhuja SM
Jul 03, 2023
05:13 pm

செய்தி முன்னோட்டம்

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி எம். சத்தியநாராயணன் தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு மேலும் 4 வார கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் இன்று(ஜூலை-3) உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலைத் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கை சிபி-சிஐடி விசாரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் வழக்குரைஞர் கே.ராஜ்கமல் மற்றும் மார்க்ஸ்-ரவீந்திரன் ஆகியோர், உயர்நீதிமன்றத்தில் தனிநபர் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். சிபி-சிஐடி விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை, அதனால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

ஜ்னசிவ்ன்

'மூன்று மாதங்களாகியும் ஏன் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை': நீதிபதிகள் 

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க கடந்த மார்ச் 29ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை உருவாக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், மூன்று மாதங்களாகியும் ஏன் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல்(AAG) ஜே.ரவீந்திரனிடம் இன்று கேள்வி எழுப்பினர். மேலும், இன்னும் 4 வாரத்திற்குள் இதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும், இதுவே தமிழக அரசுக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பு என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். ஓய்வுபெற்ற நீதிபதி ஏற்கனவே இரண்டு முறை வேங்கைவாயலுக்கு சென்று விசாரணை நடத்தியதாகவும், அடுத்த விசாரணையின் போது கண்டிப்பாக அவர் அறிக்கை தாக்கல் செய்வார் என்றும் AAG நீதிமன்றத்தில் தெரிவித்தார்.