சாலையில் இருந்த பள்ளத்தால் உயிர் பிழைத்த மூளைச்சாவு அடைந்த அதிசய பெண்மணி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் குண்டும் குழியுமான சாலைகளை பார்ப்பது சாதாரண விஷயம் தான். பெரிய பள்ளங்களினால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழந்த கதைகளைத் தான் கேட்டிருப்போம். ஆனால் பெரும் பள்ளத்தினால் ஒருவர் உயிர் பிழைத்த கதை இது. உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது பெண்மணி வினீத் ஷுக்லா. உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர்கள் அவர் மூளைச் சாவு அடைந்துவிட்டதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்துடன் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக அவரை ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
உத்தர பிரதேசம்
பள்ளத்தினால் உயிர் பிழைத்த பெண்
நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சென்ற போது பெரிய பள்ளம் ஒன்றில் ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியதில் அந்தப் பெண்மணி கண் விழித்து எழுந்துள்ளார். அதுவரை அவரது இதயத் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்திருக்கிறது. ஆனால், பள்ளத்தில் ஏறி இறங்கியபின் இதயம் சீராகத் துடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த சம்பவம் நிகழ்வதற்கு முன்னர் அவர் உயிர்பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால், எதிர்பாராத விதமாக அவர் உயிர்பிழைத்துள்ளார். தற்போது அவர் சகஜமாக மற்றவர்களுடன் பேசுவதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் மரணத்தை வென்றிருப்பதாவும் அவர் கூறியிருக்கிறார்.