வேங்கைவயல் விவகாரம்: 3 பேரின் ரத்தமாதிரிகள் சேகரிப்பு; தரமறுத்த 8 பேரின் மீது நடவடிக்கை எடுக்க திட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் என்ற பகுதியில், கடந்த டிசம்பர் மாதம், பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்டிருந்தது. இதனால், அந்த பகுதி குழந்தைகள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகாத செயலை யார் செய்தார் என்பது குறித்து வெள்ளனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் அந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி அதிகாரிகள், வேங்கைவயல் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 147 நபர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் இறுதியில், 11 பேர், சந்தேக பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
11 பேரையும் DNA பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு
முதற்கட்டமாக, இந்த 11 பேரின் டிஎன்ஏ மாதிரிகளை சோதனை செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, பரிசோதனைக்கு அனுமதி அளித்தார். அதனை தொடர்ந்து, இன்று அவர்களுக்கு பரிசோதனை செய்ய அழைத்தபோது, மூவர் மட்டுமே, தங்களின் ரத்த மாதிரிகளை தர அனுமதித்துள்ளனர். மற்றவர்கள், தங்களின் வக்கீலிடம் கேட்ட பிறகு தான் ஒத்துக்கொள்வேன் என்றும், சாதி அடிப்படையில் தங்களை சிக்க வைக்க சூழ்ச்சி நடப்பதால் ஒத்துக்கொள்ள முடியாதென்றும் வாதாடினர். அதனால் 8 பேரின் மாதிரிகளை பெற முடியவில்லை. சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மட்டும் பரிசோதனைக்கு பிறகு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், மற்றவர்கள் மீது, நீதிபதி அடுத்தகட்ட நடவடிக்கைக்கு உத்தரவிடுவார் என்றும் கூறப்படுகிறது.