Page Loader
வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகள் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது
குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டிருந்த மனித கழிவுகள் 1 பெண் மற்றும் 2 ஆண்களுடையது என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகள் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது

எழுதியவர் Sindhuja SM
Apr 21, 2023
11:25 am

செய்தி முன்னோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் என்ற பகுதியில், கடந்த டிசம்பர் மாதம், பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்டிருந்தது. இதனால், அந்த பகுதி குழந்தைகள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகாத செயலை யார் செய்தார் என்பது குறித்து வெள்ளனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் அந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி அதிகாரிகள் வேங்கைவயல் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 147 நபர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த 147 பேரில் 119 பேர் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. முக்கியாமாக, இதில் 11 பேர் சந்தேக நபர்கள் பட்டியலில் சேர்க்கப்ட்டுள்ளனர்.

details

குடிநீர் தொட்டியில் இருந்த மனித கழிவுகள் 1 பெண் மற்றும் 2 ஆண்களுடையது

இந்த சந்தேக நபர்களில் புதுக்கோட்டை ஆயுதப்படை காவல்துறையில் பயிற்சி காவலராக பணியாற்றி வரும் முரளி ராஜா என்பவரும் ஒருவர் ஆவார். முதற்கட்டமாக, இந்த 11 பேரின் டிஎன்ஏ மாதிரிகளை சோதனை செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. சம்பவம் நடந்த போது, முரளி ராஜா உட்பட 3 பேர், இது குறித்து வாட்சப்பில் பேசி கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதனால், அவர்களுடைய குரல் மாதிரியும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இதற்கிடையில், குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டிருந்த மனித கழிவுகள் 1 பெண் மற்றும் 2 ஆண்களுடையது என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.