தவெக அரசின் முதல் பட்ஜெட் 2026: சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் அரை நூற்றாண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, அதிகாரத்தை கைப்பற்றிய தமிழக வெற்றி கழக (தவெக) அரசின் முதல் பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று காலை 10 மணியளவில் கூடும் சட்டப்பேரவையில், 2026-27 நிதி ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். இதனைத் தொடர்ந்து நாளை வேளாண்துறை அமைச்சர் வினோத் தனி வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இக்கூட்டத்தொடர் மாநில அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்பார்ப்பு
தேர்தல் வாக்குறுதிகள் மீதான மக்களின் எதிர்பார்ப்பு
தவெக அரசு அமைந்தவுடனே வாக்குறுதியளித்தபடி 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் 'சிங்கப் பெண்' பாதுகாப்புப் படை ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், வரவிருக்கும் செப்டம்பர் மாதம் முதல் 'தாய்மாமன் தங்க மோதிர திட்டம்' தொடங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
எனினும், இந்த பட்ஜெட்டில், மகளிர் உரிமை தொகையை ரூ.2,500-ஆக உயர்த்துதல், ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர், விவசாயக் கடன் தள்ளுபடி, மகளிருக்கு இலவச பேருந்து பயணம் மற்றும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உதவித்தொகை போன்ற பிரதான வாக்குறுதிகள் குறித்து இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
நிதியறிக்கை
புதிய பார்வையிலான நிதியறிக்கை
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு நடுவே, கல்வித்துறை, மகளிர் நலம், இளைஞர் மேம்பாடு மற்றும் மாணவர் நலன் சார்ந்த பல்வேறு புதிய முன்னோடித் திட்டங்கள் இதில் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.
பாரம்பரிய அணுகுமுறைகளில் இருந்து விலகி, புதிய தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.