தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு
இந்தியா தனது சுதந்திரத்தை பெற்று, நாளையொடு 77 ஆண்டுகள் ஆகவுள்ளது. நாடு முழுவதும், இந்நாளை கோலாகலமாக கொண்டாட அரசு ஏற்பாடு செய்து வருகிறது. அதேபோல, தமிழகத்திலும், சுதந்திரதின விழாவிற்காக பல்வேறு அணிவகுப்புகளும், போட்டிகளும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாளை காலை, சென்னை ஜார்ஜ் கோட்டையில், முதலமைச்சர் மூவர்ண கொடியை ஏற்றி உரை நிகழ்த்தவுள்ளார். அப்போது, இந்த போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்படும். அதன் ஒரு பாகமாக, தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சிகளுள், திருச்சி மாநகராட்சி முதல் பரிசு கிடைத்துள்ளது. 2வது இடத்தில் தாம்பரம் மாநகராட்சி தேர்வாகியுள்ளது. அதேபோல, சிறந்த நகராட்சிகளில் ராமேஸ்வரம், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி நகராட்சிகள் முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளன. நாளை சுதந்திரதின விழாவில், முதல்வர் இவற்றிற்கான கேடையங்களை வழங்குவர் எனக்கூறப்பட்டுள்ளது.