'மிஸ் பண்ணுனா அவ்வளவுதான்.. மறுவாய்ப்பு கிடையாது'; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு எப்போது?
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பணிகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியான நிலையில், முதற்கட்ட கலந்தாய்வு முடிந்து தற்போது அடுத்த கட்டமாக தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.
கலந்தாய்வு
கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் மற்றும் இடம்
இந்த இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் பிப்ரவரி 24, 2026 மற்றும் 25.02.2026 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இடம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம், எண்.3, தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்), சென்னை-600 003. பட்டியல்: கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
தேர்வர்களுக்கான முக்கிய எச்சரிக்கைகள்
தேர்வர்கள் கவனிக்க வேண்டிய சில முக்கிய கட்டுப்பாடுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது: மறுவாய்ப்பு இல்லை: குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ளத் தவறினால், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கண்டிப்பாக வழங்கப்படமாட்டாது. அழைப்பாணை: இதற்கான அழைப்பாணையை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அஞ்சல் வழியாக அழைப்பிதழ் அனுப்பப்படாது. தகவல் தொடர்பு: கலந்தாய்வு குறித்த விவரங்கள் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-mail) மூலமாக மட்டுமே அனுப்பப்படும். உறுதிமொழி: சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என்று உறுதியாகக் கூற இயலாது. தரவரிசை மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையிலேயே இறுதித் தெரிவு அமையும்.
ஆவணங்கள்
தயாராக வேண்டிய ஆவணங்கள்
கலந்தாய்விற்குச் செல்லும் தேர்வர்கள் தங்களது கல்வித் தகுதிச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், பிஎஸ்டிஎம் (PSTM) சான்றிதழ் மற்றும் இதர சிறப்பு ஒதுக்கீட்டுச் சான்றுகளை அசலாகக் கொண்டு செல்ல வேண்டும். இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளைத் தெளிவாகப் படித்துவிட்டுச் செல்வது தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்க உதவும்.