
வெயில் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்
செய்தி முன்னோட்டம்
வெயில் தாக்கம் எப்படியிருக்கும் என்பதை பொருத்து, பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் செய்யப்படும் என தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
நேற்று, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, திருச்சி சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகே மே தின நினைவுச்சின்னத்தில் மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,"ஜூன் 8ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நேரத்தில் வெயில் கடுமையாக இருந்தால், முதல்வர் ஆலோசனைக்கு பின்னர் பள்ளிகள் திறப்புத் தேதி மாற்றம் செய்யப்படும்." எனக்கூறினார்.
கூடுதல் கட்டணம்
தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
தொடர்ந்து பேசிய அவர், தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும், கட்டண நிர்ணய ஆணையம் பரிந்துரைத்த வரம்பை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
"முன்னாள் நீதியரசர் தலைமையில் செயல்படும் கட்டண ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் தீர்மானங்களை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார் அவர்.
மேலும், தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக கூறிய அவர், "தமிழ்நாடு இருமொழிக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றுகிறது. மும்மொழிக் கொள்கை என்பது பெயிலியர் முறை, அதை எங்களால் ஏற்க முடியாது. புதிய கல்விக் கொள்கையின் காரணமாக மாணவர்களுக்கு இடைநிறுத்தம் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது," என்றார்.