விநாயகர் சிலைகளை கரைக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி, அன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசும் விடுமுறை அறிவித்து, சென்ற வாரம் அரசாணை வெளியிட்டது. இந்நிலையில், விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, களிமண் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே சிலைகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான், நீர்நிலைகளில் கரைக்க அனுமதி தரப்படும். சிலைகளின் ஆபரண அணிகலன்களாக உலர்ந்த இயற்கையான மலர் மாலைகளோ, வைக்கோல் போன்றவையோ பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் மாலைகள் பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது, இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம். அதேபோல, சிலைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.