விஜய்க்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவா? திமுக அதிர்ச்சி
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசியல் வரலாற்றில் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 10 இடங்கள் தேவைப்படும் நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தவெக-விற்கு நிபந்தனையுடனான ஆதரவை வழங்கத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. கூட்டணி கட்சியான காங்கிரஸின் இந்த திடீர் பல்டி திமுக வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நிபந்தனை
காங்கிரஸின் நிபந்தனைகளும் அதிகாரப் பகிர்வும்
தமிழக காங்கிரஸ் மேலிடம் நடத்திய அவசர ஆலோசனைக் கூட்டத்தில், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஆதரவிற்குப் பதிலாக புதிய அமைச்சரவையில் 2 அமைச்சர் பதவிகள் மற்றும் அரசு வாரியங்களின் தலைவர் பதவிகளை காங்கிரஸ் கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பாஜக அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளுடன் தவெக எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்ற முக்கிய நிபந்தனையையும் காங்கிரஸ் விதித்துள்ளது.
பதவியேற்பு
விஜய் முதலமைச்சராக பதவியேற்பு?
108 இடங்களை வென்ற தவெக-வுடன் 5 இடங்களை வைத்துள்ள காங்கிரஸ் இணையும்போது பலம் 113-ஆக உயர்கிறது. மீதமுள்ள இடங்களுக்கு இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக போன்ற கட்சிகளுடன் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஒருமித்த கருத்து எட்டப்பட்டால், மே 7-ஆம் தேதி தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்பார் என்றும், அவருடன் 9 அமைச்சர்கள் பதவியேற்க வாய்ப்புள்ளதாகவும் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிருப்தி
திமுகவின் அதிருப்தியும் அரசியல் பரபரப்பும்
காங்கிரஸின் இந்த முடிவிற்கு திமுக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. தங்களது கூட்டணியில் இருந்துகொண்டு காங்கிரஸ் 'முதுகில் குத்திவிட்டதாக' திமுக பேச்சாளர் சரவணன் விமர்சித்துள்ளார். எனினும், தமிழகத்தில் ஒரு மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என காங்கிரஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. 'இந்தியா' கூட்டணித் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் விஜய்யின் இந்த வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தவெக சட்டமன்றக் குழுத் தலைவராக விஜய் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க இன்று உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.